Thursday, February 11, 2016

ஒரு வகுப்பில் எத்தனை புதிய வார்த்தைகளைக் கற்றுத்தரலாம்?

நம் மாணவர்களுக்கு ஒரு வகுப்பில் எத்தனை புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம்? நூறா அல்லது பத்தா? அதிகமாக வார்த்தைகள் தந்தால் மாணவர்கள் இது சுமையாக எண்ணி தமிழ்க் கற்பதில் ஆர்வம் இழக்கக்கூடும். குறைவாக சொல்லிக்கொடுத்தாலும்  ஆர்வம் போய்விடும். பிறகு, எத்தனை வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தால் நல்ல விளைவுகள் இருக்கும்? மாணவர்களும் தமிழை விரும்பிக் கற்கவேண்டும் அதே சமயத்தில் கற்பது பல காலங்கள் அவர்கள் மனதில் இருக்கவும் வேண்டும்.

நம் மாணவர்கள் தமிழ்ப் பள்ளிக்கு வருவது வாரம் ஒரு முறை மட்டுமே. அதிலும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே தமிழ்க் கற்கும் சூழலில் இருக்கிறார்கள். தமிழில் கற்றுக்கொள்ளவேண்டியதும் நிறைய உள்ளது. அதனால், அவர்களுக்கு எவ்வளவு சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சொல்லிக் கொடுக்கலாம் என்கிற ஆர்வம் நமக்கு வருவது இயற்கையே. ஆனால், அப்படி நிறைய சொல்லிக் கொடுப்பது சரியான விளைவை உண்டாக்குமா என்கிற கேள்வி உண்டாகிறது. நிறைய வார்த்தைகளை ஒரே வகுப்பில் சொல்லிக்கொடுத்தால் அவற்றில் எத்தனை விஷயங்கள் மனதில் நிற்கும் என்பதை முக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்

 எனவே அதிகமான அளவு புதிய வார்த்தைகளைக் சொல்லிக்கொடுப்பதைத் தவிர்ப்போம். 

TPRS - Teaching Proficiency through Reading and Storytelling என்னும் மொழிக்கற்பிக்கும் உத்தியை உருவாக்கிய முனைவர் Blaine Ray அவர்கள் ஒரு மணிநேர வகுப்பில் ஐந்து புதிய வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தால் போதும் என்கிறார். மேலும் "Fluency is developed when we take a short syllabus and go as deep as possible instead of a miles long syllabus with shallow depth" என்கிறார்.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.

Quality Is Better Than Quantity.
 
என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்! ஆழ உழுவதால்தான் பயிரின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊன்றி பயிர் செழிப்பாகவும் நல்ல மகசூல் தருவதாகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே.

இந்த கருத்து மொழிப் பாடத்துக்கும் மிகவும் பொருந்தும்.

"ஒரு மணிநேர வகுப்பில் 5 புதிய வார்த்தைகள் கற்றுக்கொடுத்தால் போதும் என்கிறார்" முனைவர் Ray. அதனால் 1:30 மணிநேர வகுப்பில் 7 வார்த்தைகள் போதமல்லவா? 7 என்பது ஒரு முக்கியமான எண்! ஆராய்ச்சியாளர் முனைவர் George Miller அவரது ஆராய்ச்சியில் "our short term memory can only accept 'seven plus or minus 2' things at a time" என்று கண்டு சொல்லி இருக்கிறார். அதனால் தான் நம் வள்ளுவர் 7 வார்த்தைகளில் குறளை எழுதியுள்ளாரோ!

எனவே, ஒரு 1:30 மணிநேர வகுப்புக்கு 7 வார்த்தைகள் தேர்ந்தெடுத்து அந்த வார்த்தைகளைச் சார்ந்த வாக்கியங்கள், கதைகள், சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றி நிறைய பேசுவோம், மாணவர்களையும் பேசவைப்போம். இப்படி செய்வதன் மூலம் மாணவர்களுக்கு அந்த வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிகிறது. நீண்ட நாட்களுக்கு மறக்கவும் மாட்டார்கள். அதோடு அந்த வார்த்தைகள் தொடர்புடைய வாழ்க்கையில் பயன்படுத்தும் விஷயங்களைப் பற்றி பேசுவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி
லோகு

1 comment:

  1. This article was also published in ITA's Pleasanton 10th year malar.

    ReplyDelete