Thursday, June 9, 2016

M குமரன் S/O மீனா & முருகன்

தமிழ்நாட்டில் ஒரு ஊரில் மீனாவும் முருகனும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வேலை காரணமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். அமெரிக்காவில் நண்பர்களோ உறவினர்களோ யாரும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பெரும்பாலோர் தமிழ் நண்பர்களாக இருந்தார்கள். நண்பர்களுடன் தமிழில் பேசினார்கள். தமிழ் மன்ற நிகழ்ச்சிக்குச் சென்றார்கள். தமிழ்ப் படம் பார்த்தார்கள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அப்படியே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்கள். இடம்தான் வேறே தவிர மொழி, கலாச்சாரம் தொடர்பாக பெரிய எந்த ஒரு மாற்றமும் இருந்ததாக அவர்கள் நினைக்கவில்லை.

சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் குமரன். இவர்தான் நம் கதாநாயகன். குமரன் தமிழிலோ ஆங்கிலத்திலோ அல்லது கலந்தோ பேச ஆரம்பித்தான். குமரன் அவனுக்கென்று ஒரு நண்பர்கள் குழுவை உருவாக்கிகொண்டான். அந்த குழுவும் மொழி கலந்த குழுவாகவே இருந்தது. அதனால் நண்பர்களுடன் பேச ஆங்கிலம் பயன்படுத்தினான். குமரன் பின் பள்ளிக்குச் சென்றான். அங்கு பள்ளியில் ஆங்கிலத்திலேயே பாடம் கற்றான். வீட்டிலும் ஆங்கிலத்திலேயே பாடம் கற்றான். ஆங்கிலம் அவனுக்கு விரைவில் பழகிவிட்டது. இப்போது படிப்படியாக தமிழ் குறைந்து பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்தான். தமிழில் சொன்னாலும் பதில் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தான்.

மீனாவும் முருகனும் குமரன் தமிழில் பேசவில்லையே என்று கவலை கொண்டார்கள். அவனது மொழி மற்றும் கலாச்சாரம் மீது அக்கறையுள்ள மீனாவும் முருகனும் இது குறித்து மருத்துவரிடம் கலந்து பேசினார்கள். மருத்துவர் இது உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இது மொழி சம்பந்தப்பட்டது. அதனால், மொழியியல் அறிஞரைப் பாருங்கள் என்று சொன்னார். அவர்கள் SJSU உள்ள ஒரு மொழியியல் முனைவரைப் பார்த்தார்கள்.

அவர் இது பற்றி விரிவாக பேசினார். அப்போது குமரனுக்கு உள்ள பிரச்சனை புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலோர் சந்திக்கும் பிரச்சனை. அதனால் அவனுக்கு உள்ள பிரச்சனைகளைப் பற்றி சொன்னார். 1) குமரன் ஒற்றை மொழியாளனாக மாறிவருகிறான். 2) கலாச்சார தொடர்பு குறைந்து வந்தது. 3) தமிழ் மட்டுமே தெரிந்த தன் உறவினர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளான். 4) தன்  இன, மொழி, மற்றும் கலாச்சாரத்தை விடுத்து தன்  அடையாளத்தை இழந்து வருகிறான். போன்ற பிரச்சனைகளைச் சொன்னார். அதற்கான தீர்வாக பின்கண்ட சில வழிகளைச் சொன்னார்.

1) குமரனுக்கு தமிழ் பேசும் நண்பர்கள் குழுவை உருவாக்கிக் கொடுங்கள்.
2) பள்ளிப் பாடங்களை வீட்டில் தமிழில் சொல்லிக்கொடுங்கள்.
3) வீட்டில் "No  English" விதிமுறையை கடைபிடியுங்கள்.
4) உறவினர்களுடன் வாரம் ஒருமுறை தமிழில் பேச வையுங்கள்.
5) தமிழ் பற்றியும், தமிழ் வரலாறு பற்றியும் கதைகள் சொல்லுங்கள்.

மீனாவும் முருகனும் நாங்கள் தமிழ் பற்றி சொல்வதை குமரன் சரியாக கேட்பதில்லை என்ன செய்வது என்று டாக்டரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் U phenomena பற்றி சொல்லி குழந்தைகளுக்கு எது தேவை என்று அறிந்து கட்டாயப்படுத்தியாகிலும் அவர்களுக்குத் தர வேண்டியது பெற்றோர் கடமை என்று சொன்னார்.

நன்றி: முனைவர் குமார், SJSU, San Jose, CA

மீனாவும் முருகனும் டாக்டர் சொன்னது போல செய்தார்கள். பின் குமரன் மீண்டும் தமிழில் நன்றாக பேச ஆரம்பித்தான். ஆனால், அவன் வளர்ந்து பதின்ம வயதை அடைந்த போது அவன் தமிழ் தெரிந்த நண்பர்களோடு தமிழில் பேசினாலும் மற்றவர்கள் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதன் காரணமாக தமிழில் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தான். மீண்டும் அவர்கள் டாக்டரை சந்தித்தனர். அவர் இந்த வயதில் கிண்டல் (bullying) என்பது பெரிய பிரச்சனைதான். அதை தடுக்க சில வழிகளைச் சொன்னார்.

6) பள்ளிக்குச் சென்று தமிழ் பற்றியும் தமிழ் வரலாறு கலாச்சாரம் பற்றியும் மற்ற மாணவர்களுக்கும் சொல்லுங்கள். இப்படி சொல்வதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு மற்ற கலாச்சாரம் மீதும் ஒரு மதிப்பு வரும்.
7) குமரனிடம் மற்ற பிள்ளைகள் செய்யும் கிண்டலை எப்படி சமாளிப்பது என்று தொடர்ந்து சொல்வோம். தொடர்ந்து தமிழ் தொடர்பான கதைகள் சொல்வோம்.

குமரன் தமிழில் பேசவில்லையென்ற ஒரு குறை மேலோட்டமாக இருந்தாலும் இதற்குப் பின் நமக்குத் தெரியாத பல பிரச்சனைகள் இருப்பதை நாம் உணருவதில்லை.

நாம் அனைவரும் தமிழ் ஆங்கிலம் என்று குறைந்தது இரண்டு மொழிகள் கற்றோம். அதனால் இருமொழிக் கற்றதால் உள்ள பயன்களை அனுபவித்தோம். பல மொழிகள் கற்பது கல்வியில் சிறந்து செயல்பட உதவுகிறது, மேலும் ஞாபக மறதி போன்ற நோய்கள் வருவது சில காலங்கள் தள்ளி வைக்கப்படுகிறது. ஆனால் குமரனுக்கு இந்த வாய்ப்புகள் குறைவே. மேலும் தாய்மொழியில் சிறந்து இருப்பவர்கள் அடுத்த மொழிகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது. இந்த பயனையும் குமரன் இழக்கிறான்.

இனம், மொழி, கலாச்சாரம் மறந்த குமரன் அடையாளம் இழப்பதன் மூலம் மன அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

இப்படி செய்ததன் மூலம் மீனாவும் முருகனும் குமரனின் ஆழ்மனதில் தமிழ் மொழியைப் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் நல்ல எண்ணத்தை உருவாக்கி தாய் மொழியாலும் சொந்த கலாச்சாரத்தாலும் கிடைக்கக்கூடிய பலன்களை குமரன் பெற வைத்தனர்.

தாய் மொழி கற்பது ஒரு கூடுதல் சிறப்பா? அல்லது தாய் மொழி தெரியாதது ஒரு குறையா?

ஆய்வு முடிவுகள் சில:

  • Bilingual kids perform well in academics compared to monolingual kids.
  • A kid proficient in mother tongue does really well in second languages.
  • The first language knowledge and skill are transferable.
  • Being bilingual delays senility and alzheimer's.
  • Acquiring more languages produces more neurons in the brain which are used for other purposes also.

இந்தக் கதை முனைவர் ஸ்வாதி வன்னியராஜன், SJSU, San Jose,  CA அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

நன்றி
லோகு

2 comments:

  1. Sides: https://docs.google.com/presentation/d/1ZqwKOyU1Jx6KXxogD4qXS4tNkjbD1d5t6GGL5hZ2Rvg/edit#slide=id.p

    ReplyDelete
  2. A presentation video:

    https://www.youtube.com/watch?v=-3Tv3h9x4fU

    ReplyDelete